வேலுார்:வேலுாரில், வேன் டிரைவரிடம், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவின் மேலாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தைச் சேர்ந்தவர், முருகேசன், 56. இவர், திருவண்ணாமலையில் உள்ள, ஆவின் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில், மினி வேன் ஓட்டி வந்தார்.துரிஞ்சாபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில், கொள்முதல் செய்யும் பாலை, திருவண்ணாமலை ஆவினுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு, ஆவின் சார்பில், 1.81 லட்சம் ரூபாய், வேன் வாடகை பாக்கி வர வேண்டி இருந்தது.
இதற்கான காசோலை, வேலுார் சத்துவாச்சாரியில் உள்ள, ஆவின் மண்டல அலுவலகத்தில் தயாராக இருந்தது. இதை வழங்க, அலுவலக மேலாளர் ரவி, 55 என்பவர், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.முருகேசன், வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று மதியம், 1:30 மணிக்கு ஆவின் அலுவலகத்தில், மேலாளர் ரவியிடம், முருகேசன் பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரவியை கைது செய்தனர்.கைதான ரவிக்கு, மனைவி, மூன்று ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE