பெரம்பலுார்:பெரம்பலுார், பேங்க் ஆப் பரோடா வங்கியில், மதுரை சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
பெரம்பலுார், வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில், நேற்று காலை, 11:30 மணியளவில், மதுரையில் இருந்து வந்த இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தலைமையிலான சி.பி.ஐ., அதிகாரிகள், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை, சேமிப்பு, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து, வங்கி மேலாளர் சத்தியராஜ் மற்றும் ஊழியர்களிடம், மாலை, 4:00 மணி வரை விசாரித்தனர். மேலும், ஆவணங்களை சரி பார்த்தனர்.
'வழக்கமான வருடாந்திர ஆய்வு தான்; வேறு எதுவும் கிடையாது' என, வங்கி ஊழியர்கள் கூறினர். சி.பி.ஐ., அதிகாரிகள் தரப்பில், எவ்வித தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர். பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரது வங்கி கணக்கிற்கு, சில மாதங்களுக்கு முன், கோடிக்கணக்கான ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE