திருநெல்வேலி:அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல விழாவில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்காக, முதல்வர், பழனிசாமி., காத்திருந்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் மகள் ஹரிணி பூப்புனித நீராட்டு விழா, நேற்று சங்கரன்கோவிலில் நடந்தது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வந்திருந்த முதல்வர் பழனிசாமி., நெல்லையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று காலை, 9:15 மணிக்கு நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் சென்றார்.
விழாவில் அவர் பேசியதாவது:ஏழை, எளிய மக்கள், அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், அரசின், 7.5 உள்ஒதுக்கீட்டின் படி, 313 மாணவர்கள் மருத்துவ சீட் பெற்றனர். நீண்டகாலமாக துார் வாரப்படாத ஏரிகளை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார் வாரியுள்ளோம்.சிறந்த நீர் மேலாண்மை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம். கல்வியில், நீர் மேலாண்மையில், தொழில் துறையில், புரட்சி படைத்திருக்கிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.
காலை, 10:35 மணிக்கு சங்கரன்கோவில் வந்த முதல்வர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் வருகைக்காக காத்திருந்தார். அவர் வர தாமதமானதால், 11:35 மணிக்கு துாத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம், தேனியில் இருந்து தாமதமாக வந்தார். அவர் கூறுகையில், ''தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். ''இந்த ஆண்டும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE