கடம்பத்துார் - கடம்பத்துார் ஒன்றியத்தில், சாலையை சரியான முறையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு, 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது செஞ்சி ஊராட்சி. இங்கிருந்து, சிற்றம்பாக்கம் வழியாக, பேரம்பாக்கம் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.இந்த சாலை, சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, இந்த சாலை, 73 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த அக்டோபர் மாதம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், இரண்டே மாதத்தில், சாலை சேதமடைந்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, கலெக்டர் பொன்னையா நேரில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.மேலும், ஒப்பந்ததாரை நேரில் அழைத்து, சாலை சீரமைக்கப்பட்டு வழங்கப்பட்ட தொகையில், 10 சதவீதம் அபராதம் விதித்தார்.மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒப்பந்த பணிகள் முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும், ஒப்பந்த பதிவும், ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE