காஞ்சிபுரம் - காஞ்சிபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், 'ஈட் ரைட்' என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கலெக்டர் மகேஸ்வரி துவக்கி வைத்தார். ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவே மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. மேலும், நம் நாட்டு சீதோஷ்ண காலத்திற்கு தகுந்த இயற்கையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில், மாற்றம் ஏற்பட்ட பின் நோய்கள் அதிகரிக்க துவங்கின.எண்ணெய், உப்பு, சர்க்கரை போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுமுறை பயன்படுத்த கூடாது.மேலும், பாக்கெட் உணவு பொருட்களில், 'பிளஸ் எப்' என்ற குறியீடு பார்த்து வாங்க வேண்டும். ஆரோக்கியமான உணவு மூலம் அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என, கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பாடல் காட்சி திரையிடப்பட்டது.முன்னதாக அரங்கத்தின் வெளியில் பாரம்பரிய உணவு வகைகள், பழங்கள், கீரை வகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இதை கலெக்டர் பார்வையிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE