சென்னை - புறநகர் மின்சார ரயில்களில், அனைத்து பயணியர் அனுமதிக்கப்பட்டும், ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாததால், சமூக இடைவெளி' அம்போவானது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், சென்னை ரயில்வே கோட்டத்தில், முதற்கட்டமாக, புறநகர் மின்சார ரயில்களில், அத்தியாவசிய பணியில் ஈடுபடும், அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோர் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.அடுத்தகட்டமாக, காலை, மாலை வேளை தவிர, மற்ற நேரங்களில் பெண் பயணியர், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன், பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.தொடர்ச்சியாக, பெண்கள், குழந்தைகள், முழு நேரமும் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.இதற்காக, சென்னை ரயில்வே கோட்டத்தில், கடற்கரை -- தாம்பரம், -தாம்பரம் -- செங்கல்பட்டு உட்பட, ஐந்து புறநகர் மின்சார ரயில் வழித்தடங்களிலும், 410 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், 'பீக் ஹவர்' நேரங்களான 7:00 முதல், 9:30 மணி வரையும், மாலை, 4:30 முதல், இரவு, 7:00 மணி வரையும், தவிர்த்து, மற்ற நேரங்களில், நேற்று முதல், அனைத்து பயணியரும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நேற்று இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் இருந்தது.சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம், சூலுார்பேட்டை ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
அதேபோல, செங்கல்பட்டு -- கடற்கரை இடையே இயக்கப்பட்ட, புறநகர் மின்சார சிறப்பு ரயில்களிலும், கூட்ட நெருக்கடி அதிகம் இருந்தது. பல பயணியர், முக கவசம் இன்றியும் பயணம் செய்தனர்.மீண்டும் கொரோனா தொற்று, உலகளவில் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் அலட்சியமாக இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE