குடியாத்தம் : ''தேர்தலில், முதியோருக்கு தபால் ஓட்டு வழங்குவது, முறைகேட்டுக்கு வழி வகுக்கும்,'' என, 82 வயதாகும், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டியில், தி.மு.க., சார்பில், கிராம சபா கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்டோர், தபால் மூலம் ஓட்டு போடலாம் என்ற நடைமுறை, முறைகேட்டுக்கு வழிவகுக்கும். பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது. சட்டசபை தேர்தல் வருவதால், இந்த பணத்தை வழங்குகின்றனர்.

அ.தி.மு.க., ஊழல் பட்டியல் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். விஜிலென்சிலும் புகார் செய்துள்ளோம். கவர்னரை சந்தித்து, ஊழல் பட்டியலை வழங்கி உள்ளோம். பொதுமக்களுக்கு மத்திய அரசு வழங்கிய, ரேஷன் அரிசியில் முறைகேடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சியில் இருந்து, தி.மு.க., வெளியேறியபோது, ஒரு லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்தது. தற்போது, 7 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE