சேலம்: எம்.பி., தயாநிதி வந்தபோது, அவருடன் வந்த, தி.மு.க.,வினரின், கார் கண்ணாடிகளை உடைத்த, பா.ம.க.,வை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த போலீசார், நான்கு பேரை தேடுகின்றனர்.
சேலத்தில், தி.மு.க., - எம்.பி., தயாநிதி பிரசாரம் மேற்கொண்டபோது, பா.ம.க.,வின் அன்புமணியை தாக்கி பேசியதாக, அக்கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். இதுதொடர்பாக, ஓமலூரில், இரு கட்சியினரும் மோதிக்கொண்டனர். இத்தகவல் பரவியதால், சேலம் நோக்கி வந்த தயாநிதியின் காரை, பின்தொடர்ந்து வந்த, தி.மு.க., நிர்வாகிகளின் கார் கண்ணாடிகளை, பா.ம.க.,வினர் உடைத்தனர். குறிப்பாக, சேலம், அரசு பொறியியல் கல்லூரி அருகே, தி.மு.க.,வின், ஓமலூர் கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலர் ரமேஷ், 39, என்பவரின், டயாட்டோ இன்னோவா, ஹூன்டாய் இயான் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதேபோல், டால்மியா போர்டு அருகே, ஓமலூரை சேர்ந்த தங்கம், 57, டாடா சபாரி; காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலர் அறிவழகன், 35, என்பவரின் மகேந்திரா 'எக்ஸ்யுவி', தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் சரவணன், 36, 'ஸ்கார்பியோ' கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இவர்கள் புகார்படி, சூரமங்கலம், கருப்பூர் போலீசார், பா.ம.க., வடக்கு மாவட்ட துணைத்தலைவரான, மந்தனாம்பள்ளியை சேர்ந்த பாலசுப்ரமணியன், 44, அக்கட்சி உறுப்பினர்களான, டால்மியா போர்டை சேர்ந்த அருள், 36, ஜாகீர்அம்மாபாளையம் பூபதி, 30, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். மேலும், நரசோதிப்பட்டி சரவணன், 34, கிருஷ்ணன், 35, பள்ளப்பட்டி சிவபெருமாள், 38, ஜாகீர்அம்மாபாளையம் கோபால், 34, ஆகியோரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE