ஓசூர்: கர்நாடகாவில், இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு, இரவில் செல்லும், 30க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டனில், புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப் பட்டதால், மத்திய அரசு அந்நாட்டிற்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது. புதிய கொரோனா வைரசின் தீவிரத்தை உணர்ந்து, கர்நாடகா மாநிலம் முழுவதும், நேற்று முதல் வரும் ஜன.,2 வரை, இரவு நேர ஊரடங்கு உத்தரவை, அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி தினமும் இரவு, 10:00 முதல், காலை, 6:00 மணி வரை, ஊரடங்கு அமலில் இருக்கும். பால், காய்கறி, மருந்து வாகனங்கள் சென்று வரலாம். மேலும், மருந்தகங்கள், மருத்துவமனைகள் போன்ற அவசரக்கால பணிகளில் இருக்கும் நிறுவனங்கள் மட்டும், இரவிலும் திறந்திருக்க அனுமதி உள்ளது. இரவு, 10:00 மணிக்கு மேல், கர்நாடகா மாநில அரசு பஸ்கள், பெங்களூரு நகர பஸ்கள், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால், சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு, இரவு, 10:00 முதல், காலை, 6:00 மணி வரை, செல்லும், 30க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், தமிழக எல்லையான ஓசூர் பஸ் ஸ்டாண்டுடன் நிறுத்தப்படும் என தெரிகிறது. உயரதிகாரிகளிடம் இருந்து, தகவல் வந்தவுடன், பஸ்களை நிறுத்த, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE