தலைவாசல்: ஒரு சுரைக்காயை, 22 ரூபாய்க்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல், வீரகனூர், ஆத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், சுரைக்காய் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. தற்போது, பனியால் பூக்கள் கருகுதல், மகரந்தம் சோராமை உள்ளிட்டவற்றால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, அதன் வரத்து சரிந்துள்ளது. நேற்று, 1,000 காய்களுக்கும் குறைவாகவே சுரைக்காய் வரத்து இருந்தது. இதனால், வியாபாரிகள் இடையே, போட்டி ஏற்பட, ஒரு காய், 20 முதல், 22 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். இரு வாரத்துக்கு முன், ஒரு காய் ஐந்து ரூபாய்க்கு விற்ற நிலையில், வரத்து சரிவால், தற்போது, நான்கு மடங்கு விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: தலைவாசல் மார்க்கெட்டை பொறுத்தவரை, சுரைக்காய் விலை, 10 ஆண்டில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில், ஒரு காய் விலை, 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதே, தற்போது, 20 ரூபாயை தாண்டியுள்ளது. வெளியூரில் இருந்து வரத்து இல்லாத நிலையில், உள்ளூரில் விளைச்சல் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, விலை சரிய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE