பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் இருப்பு வைக்கப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 6ம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூன், அக்., ஜன., என மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன.நடப்பாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, 'ஆன்லைன்' வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது. பாட புத்தகங்கள் மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இரண்டாம் பருவம் முடிந்து, மூன்றாம் பருவம் ஜன., மாதம் துவங்குகிறது. மாணவர்களுக்கு வழங்கும் வகையில், மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்க அரசு உத்தரவிட்டது.6ம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு வழங்குவதற்கான புத்தகங்கள் தற்போது வந்துள்ளன. இவை, நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்படுகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 6ம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 27 ஆயிரத்து, 100 பாட புத்தகங்கள் வந்துள்ளன. புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE