திருச்சி:'கோமா' நிலையில் இருந்த மகனை பராமரிக்க முடியாமல், கழுத்தறுத்து கொலை செய்த தந்தையை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே லட்சுமாபுரத்தைச் சேர்ந்தவர், தொழிலாளி தங்கவேலு, 52. இவரது மனைவி செல்வராணி, 46. தம்பதியின் மகன் கோபி, 29. இவர், 2012ல் கல்லுாரியில் படிக்கும் போது விபத்தில் சிக்கி, கோமா நிலையை அடைந்தார்; ஒரு கையும், காலும் செயல்படவில்லை.படுத்த படுக்கையான அவரை, பெற்றோர், தங்களிடம் இருந்த சொத்துக்களை விற்று பராமரித்து வந்தனர்.
தங்கவேலுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.கடந்த, 10 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், செல்வராணி கோபித்துக் கொண்டு, உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.மகனை பராமரிக்க மிகவும் சிரமப்பட்ட தங்கவேலு, கடைசியாக தான் வைத்திருந்த சைக்கிளையும் விற்று விட்டார்.
மகனை தனியாக பராமரிக்க முடியாத வேதனை, பணம் இல்லாத சூழலால் விரக்தி அடைந்த தங்கவேலு, 22ம் தேதி இரவு, மகனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்கில் போட்டு, வெளியே சென்று விட்டார்.மறுநாள் காலை மகன் மற்றும் பேரனை காணாமல், தங்கவேலுவின் தாய் தேடி உள்ளார். அப்போது, செப்டிக் டேங்கில் கிடந்த கோபியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.தா.பேட்டை போலீசார், தங்கவேலுவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE