திருச்சி:தங்கம் கடத்த உதவிய ஏர் இந்தியா ஊழியர் உட்பட ஐந்து பேரை, 'கஸ்டம்ஸ்' அதிகாரிகள் கைது செய்து, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து நேற்று திருச்சி வந்த, ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானத்தில் வந்த பயணியரிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், தங்கம் ஏதும் சிக்கவில்லை.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தின் வெளியே, கடத்தல் தங்கம் கைமாறுவதாக வந்த தகவலால், அதிகாரிகள், வெளியே கண்காணித்தனர். அப்போது, திருச்சியில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் கோபிநாத், 50 என்ற அதிகாரி, கடத்தல் தங்கத்தை கொண்டு வந்து, வெளியாட்களிடம் கொடுக்க முயன்றார்.அதிகாரிகள், கோபிநாத்தை பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கொடுத்த தகவல்படி, விமான நிலையம் வெளியே சுற்றித்திரிந்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE