திருவனந்தபுரம்:தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக, கேரள முன்னாள் தலைமை செயலர் சிவசங்கரின், 2 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் ஊழியர் சுவப்னா சுரேஷ், கேரள முன்னாள் தலைமை செயலர் சிவசங்கர் உட்பட பலரை, என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது.இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பண பரிமாற்றம் பற்றி, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், சிவசங்கர் மீது, அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
'தங்க கடத்தல் வழக்கில், சிவசங்கருக்கு தொடர்பு உள்ளது. தங்க கடத்தல் கும்பலுக்கு, அவர் தெரிந்தே உதவி செய்துள்ளார்' என, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சிவசங்கர் உட்பட கைதானவர்களுக்குச் சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. இதில், சிவசங்கருக்குச் சொந்தமான, 1 கோடி ரூபாய் சொத்துக்களும் அடக்கம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE