புதுடில்லி: விவசாயிகளிடம் பொய் பிரசாரம் செய்து அவர்களை தவறாக வழிநடத்துவதாக, பிரதமர் மோடி தங்கள் மீது ஆதாரமின்றி பொய் சொல்வதாக, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ், தேசியவாத காங்., ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, இடதுசாரிகள், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் சட்டங்களை பற்றி, நாங்கள் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து, விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக, பிரதமர் கூறுகிறார். இதன் மூலம் உண்மையை மறைக்க, பிரதமர் முயற்சிக்கிறார்.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் பற்றி சிறிதும் ஆதாரமின்றி, விவசாயிகளிடம் பொய் சொல்வதை, பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார்; இதை, அவர் நிறுத்த வேண்டும். டில்லியில், 500க்கும் அதிகமான விவசாய சங்கத்தினர் ஒருங்கிணைந்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக, வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, நாங்கள் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE