பாட்னா :அருணாச்சல பிரதேசத்தில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர்.
பீஹாரில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி, வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
பின்னடைவு
எனினும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி, இம்முறை, 43 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கூட்டணி கட்சியான, பா.ஜ., இந்த தேர்தலில், 74 இடங்களை கைப்பற்றியது. இது, தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளத்தின் செல்வாக்கை குறைத்தது.
இந்நிலையில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு, அருணாச்சல பிரதேசத்திலும், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 60 இடங்களை உள்ளடக்கிய மாநில சட்டசபையில், ஐக்கிய ஜனதா தளத்திற்கு, ஏழு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.அந்த ஏழு எம்.எல்.ஏ.,க்களில், ஹாயேங் மாங்பி, ஜிக்கே டாக்கோ உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.,க்கள், நேற்று, பா.ஜ.,வில் இணைந்தனர். இதில், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், ஏற்கனவே மூன்று பேர், ஏற்கனவே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருந்தனர்.
நம்பிக்கை
இதையடுத்து, சட்டசபையில், பா.ஜ.,வின் பலம், 48 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் சார்பில், ஒரே ஒரு எம்.எல்.ஏ., மட்டுமே உள்ளார்.
இதுகுறித்து, மாநில பா.ஜ., தலைவர் பியூரம் வாகே கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் பெமா காண்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பா.ஜ.,வில், அவர்கள் இணைந்துஉள்ளனர்' என்றார்.
ஒரே கூட்டணியில் இருந்தாலும், கூட்டணி தர்மத்தை மீறி, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., வளைத்துள்ளதால், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட, ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE