காத்மாண்டு:நேபாள பார்லிமென்டை கலைத்தது பற்றி விளக்கம் கேட்டு, பிரதமர் சர்மா ஒலிக்கு, அந்நாட்டு உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், 2018ல், சர்மா ஒலி தலைமையிலான, சி.பி.என்.யு.எம்.எல்., மற்றும் முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தாஹால் பிரசந்தா தலைமையிலான, சி.பி.என்., மாவோயிஸ்ட் மையம் இணைந்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. பிரதமராக சர்மா ஒலி பதவியேற்றார். கட்சியின் தலைவராக சர்மா ஒலியும், துணைத் தலைவராக பிரசந்தாவும் பதவி வகித்து வந்தனர். இருப்பினும், அவர்கள் இரு அணிகளாகவே செயல்பட்டு வந்தனர். சர்மா ஒலியின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு, பிரசந்தா கோஷ்டியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமீபத்தில், பிரதமர் ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பார்லிமென்டை முன்கூட்டியே கலைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையேற்று பார்லி.,யை உடனடியாக கலைத்து, அதிபர் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு, ஏப்., 30 மற்றும் மே, 10ல் இரண்டு கட்டங்களாக பார்லிமென்டிற்கு தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
பார்லிமென்டை, பிரதமர் சர்மா ஒலி கலைத்ததை எதிர்த்து, நேபாள உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. பார்லிமென்ட் கலைப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி ராணா, மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி ராணா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன், துவங்கியது.பார்லிமென்ட் கலைப்பு குறித்து விளக்கம் கேட்டு, பிரதமர் சர்மா ஒலிக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE