கோல்கட்டா:மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தை அமல்படுத்தாமல் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மம்தா பானர்ஜி துரோகம் இழைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து அதற்கு பதிலடி கொடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக தான் விவசாயிகளுக்காக கவலைப்படுவதுபோல் பிரதமர் மோடி கூறி வருகிறார்.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை வைத்து மேற்கு வங்க மாநில விவசாயிகளுக்கு உதவுவது போல் பேசி வருகிறார். அதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறி வருகிறார்.உண்மை என்னவென்றால் அவர் பொய்கள் மற்றும் திரிக்கப்பட்ட தகவல்களை வைத்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். அரசியல் லாபத்திற்காக தீங்கிழைக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் நலன்களுக்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற என் அரசு தயாராக உள்ளது. எனினும் மத்திய அரசு எங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது.விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதிகளை மாநில அரசின் வாயிலாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மத்திய வேளாண் அமைச்சருக்கு கடிதம் கூட எழுதியுள்ளேன்.
மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை மாநிலத்தில் அமல்படுத்தியுள்ளோம். எனினும் விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வில்லை என கூறுவது அபத்தமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE