கரூர்: கடும் பனிபொழிவால் ஏற்பட்ட, பூஞ்சான் நோயால் வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, கருப்பத்தூர், வதியம், மணத்தட்டை, குளித்தலை, மருதூர், புகளூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில், வெற்றிலை விவசாயம் நடக்கிறது. இந்த பகுதிகளில், காவிரியாற்றை நம்பி வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. நடப்பாண்டு வெற்றிலை சாகுபடி அதிகளவில் உள்ளது. இந்நிலையில், நடப்பு மார்கழி மாத துவக்கத்தில் இருந்து, கரூர் மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு உள்ளது. இதனால், கொடிகளில் பூஞ்சான் நோய் ஏற்பட்டு, வெற்றிலை கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த சாகுபடி கிடைக்காததால், வெற்றிலை விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து, புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது: காவிரியாற்றில் தண்ணீர் செல்வதால், நடப்பாண்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. இந்நிலையில், பனிப் பொழிவு காரணமாக, பூஞ்சான் நோய் ஏற்பட்டு, வெற்றிலை கொடி கருகி வருகிறது. மேலும், வெற்றிலைக்கு கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த விலை தற்போது இல்லை. சராசரியாக, 104 கவுளி கொண்ட, ஒரு சுமை, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை குறைந்து விட்டது. பூஞ்சான் நோயை கட்டுப்படுத்த, திருச்சியில் உள்ள வெற்றிலை ஆராய்ச்சி மையம் மூலம், தரமான உயிர்கொல்லி மருந்துகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE