புதுடில்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யும்படி தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் கடந்த 31 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதனை நிராகரித்த அரசு சட்டத்தில் வாபஸ் பெற முடியாது. திருத்தம் செய்ய தயார் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் தோமர் அழைப்பு விடுத்திருந்தார். நேற்று 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்வை துவங்கி வைத்த பிரதமர் மோடி, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. அவர்களின் நிலங்கள் பறிக்கப்படாது. விவசாயிகள் மத்தியில் பொய் தகவல்கள் பரப்பப்படுகிறது என தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து, வேளாண் சங்கங்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தின. அப்போது, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்ற மத்திய அரசின் அழைப்பை ஏற்று கொண்டுள்ளனர். மேலும், வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யும்படியும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதை மையமாக வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE