மும்பை:'காங்கிரஸ் தலைமையிலான, எதிர்க்கட்சி கூட்டணி, ஒற்றுமை மற்றும் வலிமையை இழந்துவிட்டது. பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சேர வேண்டும்' என, சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்டகாலம் இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மஹாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து, கூட்டணி அரசு அமைத்துள்ளது.
ஏற்க மறுப்பு @
@
அக்கட்சியின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டு உள்ளதாவது:
விவசாயிகள், நாட்டின் தலைநகர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு, அவர்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஒற்றுமையில்லாத, பலம் குறைந்த எதிர்க்கட்சியே. நாட்டில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக இருப்பது, ஜனநாயகத்தின் பலத்தை குறைத்துவிடும்.
தற்போது, காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி, ஓர் அரசு சாரா அமைப்பு போல் தான் உள்ளது. கூட்டணியில் உள்ள சில கட்சிகள், விவசாயிகளின் போராட்டத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை. கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன.
பிரச்னை அதிகம்
ராகுல் வலுவாக போராடுகிறார். ஆனால், அவருடைய கட்சியிலேயே பிரச்னை அதிகம் உள்ளது.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி தான், மத்திய அரசுக்கு எதிராக தனியாக போராடி வருகிறார். அவருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். பா.ஜ.,வுக்கு எதிராக உள்ள, சிவசேனா, திரிணமுல் காங்., அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை, ஐ.மு.கூட்டணியில் இணைய வேண்டும். அப்போது தான், எதிர்க்கட்சிகள் கூட்டணி வலிமை பெறும்.
பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மிகவும் வலுவாக உள்ளனர். ஆனால், ஐ.மு.கூட்டணியில அதுபோல் யாரும் இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE