ராமேஸ்வரம்:எல்லை தாண்டி இலங்கையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சிறைபிடித்து வாருங்கள், என இலங்கை மீன்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தனுஷ்கோடி முதல் கோடியக்கரை வரை விசை, நாட்டுபடகு மீனவர்கள் குறுகிய கடல்பரப்பு கொண்ட பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.சில நேரங்களில் நம் மீனவர்கள் தெரியாமல் எல்லை தாண்டி மீன்பிடித்து விடுவதால் இலங்கை கடலில் மீன்வளம் பாதிப்பதாக அந்நாடு மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டிச.,12ல் இலங்கை நெடுந்தீவு அருகில் மீன்பிடித்த ராமேஸ்வரம் விசைப்படகை, அந்நாடு மீனவர்கள் வீடியோ எடுத்து சமூக தளத்தில் பரப்பியதால் அடுத்தடுத்து ராமேஸ்வரம், துாத்துக்குடியைச் சேர்ந்த 40 மீனவர்கள் கைதாகினர்.இதனால் இருநாடு மீனவர்களிடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், யாழ்ப்பாணம் மீனவர்களை சந்தித்த அந்நாட்டு மீன்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுகையில் :
நம் கடலில் உள்ள மீன்களை தடை செய்த வலையில் அள்ளிக்கொண்டும், நம் வலைகளை சேதப்படுத்தி செல்லும் இந்திய (தமிழக) மீனவர்களால் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் இழந்துள்ளீர்கள். இனிவரும் நாளில் எல்லை தாண்டி நம் எல்லைக்குள் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை சிறைபிடித்து, கடற்படையிடம் ஒப்படையுங்கள், என தெரிவித்தார்.
அமைச்சரின் ஆவேச பேச்சு, தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE