காத்மாண்டு: ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உடைவதை தடுக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவை, நேபாளத்திற்கு அனுப்பி வைக்க, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் முடிவு செய்துள்ளார்.

நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த சில மாதங்களாக, பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக, சொந்த கட்சியினரே போர்க்கொடி துாக்கி வந்தனர். கட்சியின் துணைத் தலைவரான பிரசந்தா, பிரதமர் ஒலியை கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில், பிரதமர் ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பார்லிமென்டை முன்கூட்டியே கலைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, பார்லி.,யை கலைத்து, அதிபர் உத்தரவிட்டார்.பார்லி.,யை கலைக்கும் ஒலியின் முடிவு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.பின், பிரசந்தா தலைமையில் நடந்த கூட்டத்தில், கட்சி தலைவர் பதவியிலிருந்து ஒலி நீக்கப்பட்டு, புதிய தலைவராக மாதவ் குமார் நேபாள் நியமிக்கப்பட்டார். கட்சியின் பார்லி., குழு தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ஒலி நீக்கப்பட்டு, புதியதலைவராக பிரசந்தா தேர்வு செய்யப்பட்டார்.

நேபாள கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, கட்சி உடைவதை தடுக்கும் முயற்சிகளில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இறங்கியுள்ளார். இதன்படி, அதிருப்தி தலைவரான பிரசந்தாவை, சீனாவிற்கான நேபாள துாதர் ஹவு யான்கி, சந்தித்துப் பேசினார். எனினும், பிரதமர் ஒலியை அவரால் சந்திக்க இயலவில்லை. துாதரை அனுப்பி சமரசம் செய்யும் முயற்சி, தோல்வியில் முடிந்துள்ள நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை, நேபாளத்திற்கு அனுப்பி வைக்க, அதிபர் ஜிங்பிங் முடிவு செய்துள்ளார். இன்று நேபாளத்திற்கு வரும் அந்த குழுவினர், அடுத்த நான்கு நாட்களுக்கு தங்கி இருந்து, கட்சிக்குள் நிலவும் பிரச்னைகளை தீர்த்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE