திருப்பூர்:தமிழகத்தில், உடுமலை தாலுகா மருத்துவமனை உட்பட ஐந்து அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி, தலைமை அரசு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு கட்டுப்பாட்டில், 24 மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. மத்திய அரசு அனுமதியுடன் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லுாரி அமைக்கப்பட்டு வருகிறது.அவற்றில், பெரும்பாலான மருத்துவ கல்லுாரிகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே அமைகிறது.
இதனால், அந்தந்த மாவட்டங்களில், தாலுகா அளவிலான மருத்துவமனைகளை தரம் உயர்த்தி, தலைமை அரசு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, மத்திய அரசின் 'புரோகிராம் இம்ப்ளிமென்டேஷன்' திட்டத்தில் (பிப்), வேதாரண்யம், பரமக்குடி, பழநி, போச்சாம்பள்ளி, உடுமலை ஆகிய தாலுகா அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட உள்ளன.
மருத்துவ பணிகள் துறையினர் கூறுகையில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகளுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெறப்படும். அதன்பின், மேம்பாட்டு பணி துவங்கும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE