ஓசூர்: தளி அருகே, அ.தி.மு.க., நிர்வாகிக்கு, கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தாசரப்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜரெட்டி, 62; அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர்; இ.கம்யூ., கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த இவர், கடந்த, 2006ல், தளி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போதிலிருந்தே, இவருக்கும், மற்றொரு தரப்பிற்கும் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த, 2012ல், அவரை மர்ம கும்பல் கொலை செய்ய முயற்சித்தது. இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்கு பின் உயிர் தப்பினார். இது தொடர்பாக, தளி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும், இந்த வழக்கு விசாரணை வரும், 6ல் வரவுள்ள நிலையில், கடந்த, 22ல், நாகராஜரெட்டிக்கு மொட்டை கடிதம் வந்துள்ளது. அதில், இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியளித்தால், நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்து விடுவோம் என, குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அவரது புகாரின்படி, தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE