மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து, 33 நாளுக்கு பின், டெல்டா பாசனத்துக்கு, மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து, கடந்த ஜூன், 12 முதல், தொடர்ச்சியாக டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. வங்கக்கடலில் உருவான, 'நிவர்' புயல் கரையை கடந்ததால், டெல்டா மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால், கடந்த மாதம், 23ல், டெல்டா பாசன நீர் நிறுத்தப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து, குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு, 500 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. டெல்டா மாவட்டங்களில், மழை தீவிரம் குறைந்து, வெயில் தாக்கம் அதிகரித்ததால், பாசனத்துக்கு நீர்தேவை அதிகரித்தது. இதனால், 33 நாளுக்கு பின், மேட்டூர் அணையில் இருந்து, நேற்று, மீண்டும் டெல்டா பாசனத்துக்கு, 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம், 14ல், 93.91 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 106.77 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 73.89 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 1,270 கனஅடி நீர் வந்தது. நேற்று முதல், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால், வரத்தை விட திறப்பு அதிகரித்துள்ளது. இதனால், வரும் நாளில், மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிய தொடங்கும். மேலும், பாசனத்துக்கு நீர் திறந்ததால், நிறுத்தப்பட்டிருந்த மேட்டூர் அணை, சுரங்க மின் நிலையங்களில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE