தேனி: பிரிட்டனில் இருந்து தேனி வந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கு, கொரோனா உறுதியான நிலையில், அவரது தந்தை, அத்தை மற்றும் துபாயில் இருந்து ஆண்டிப்பட்டி வந்த சிறுவன் ஆகியோருக்கு, நேற்று பாதிப்பு உறுதியானது.
பிரிட்டனில் பணியாற்றிய, 38 வயது சாப்ட்வேர் இன்ஜினியர், மனைவி, மகள், மகனுடன், கடந்த, 20ல், தேனி மாவட்டம், ஸ்ரீரெங்கபுரம் ஆலமரத் தெருவில் வசிக்கும் பெற்றோரை பார்க்க வந்தார். பரிசோதனையில், நேற்று முன்தினம் இன்ஜினியருக்கு மட்டும் கொரோனா உறுதியானது.அவருடன் தொடர்பில் இருந்த, ஏழு பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது, 60 வயது தந்தை, 67 வயது அத்தைக்கு, நேற்று கொரோனா உறுதியானது. இருவரும், தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், துபாயில் இருந்து பெற்றோருடன், ஆண்டிப்பட்டி கதிர்நரசிங்கபுரத்திற்கு வந்த, 5 வயது சிறுவனுக்கும் கொரோனா உறுதியானது. இவர்களை தாக்கியது, பிரிட்டனில் பரவும் மரபணு மாறிய கொரோனா வைரசா என்பதை அறிய, நால்வரின் சளி மாதிரிகள், பரிசோதனைக்காக, புனே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE