ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை ஊராட்சியைசேர்ந்த மகாசக்திநகர், நேருநகர் பகுதியில் பல ஆண்டாக ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
சாக்கடை, குடிநீர் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.நேருநகர், மகா சக்திநகரில் 500க்குமேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியிலிருந்து ராமநாதபுரம் மெயின் ரோட்டிற்கு செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழியின்றி காலிபிளாட்களில் தேங்கியுள்ளது. போதிய குடிநீர் வசதியின்றி லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.நேருநகரைச் சேர்ந்த சுகுமாறன் கூறுகையில், 'காவிரி கூட்டுகுடிநீர் எங்கள் பகுதிக்கு வருவது இல்லை. கிணற்று நீர், ஆழ்குழாய் தண்ணீரை பயன்படுத்துகிறோம்.
நேருநகர்- பாரதிநகர் ரோடு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இரவுநேரத்தில் வாகனஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்கியுள்ளதால் கொசுத்தொல்லை, சுகாதாரக்கேட்டால் சிரமப்படுகிறோம். புதிய ரோடு, சாக்கடை கால்வாய் வசதி செய்துதர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE