சென்னை : 'நீட்' தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து, மருத்துவக் கல்லுாரியில் சேர முயன்ற வழக்கில் தேடப்படும் மாணவியும், அவரது தந்தையும், கேரளாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் தீக் ஷா, 18. இவர், பல் டாக்டரான தன் தந்தை பாலசந்திரனுடன், இம்மாதம், 7ம் தேதி, சென்னையில் நடந்த, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்றார்.மாணவி சமர்ப்பித்த, நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடிதம் போன்றவை போலி என தெரிய வந்தது. இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை அதிகாரி செல்வராஜன், சென்னை பெரியமேடு போலீசில் புகார் அளித்தார்.போலீசார், மாணவி மற்றும் அவரது தந்தை மீது, மோசடி ஆவணம் தயாரித்தல் உட்பட ஆறு வழக்குகள் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு, தீக் ஷா, பாலசந்திரன் இருவருக்கும், போலீசார் மூன்று முறை, 'சம்மன்' அனுப்பினர்; பதில் இல்லை. இருவரும் தலைமறைவாகினர்.இந்நிலையில், மாணவியும், அவரது தந்தையும், கேரளாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இருவரையும், அம்மாநில போலீஸ் உதவியுடன் கைது செய்ய, சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE