சென்னை : 'பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் ரொக்கத்தை, ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க வேண்டும்; ஆளும் கட்சியினர் வழங்க அனுமதிக்கக் கூடாது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், தி.மு.க., சார்பில், மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனு கொடுத்த பின், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர், தன் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய போது, பொங்கல் பரிசு தொகுப்புடன், 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என,அறிவித்தார்.அதையடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும், ஆளும் கட்சியினர், கட்சி நிதியிலிருந்து பணம் கொடுப்பது போல, மக்களுக்கு, 'டோக்கன்' வழங்குகின்றனர்.அமைச்சர் வேலுமணி தொகுதியில், அ.தி.மு.க., கொடி நிறத்தில், அவரது புகைப்படத்துடன், டோக்கன் அச்சிட்டு வழங்குகின்றனர்.
அதேபோல், அமைச்சர் ஜெயகுமார் தொகுதியில், அவர் படத்துடன், டோக்கன் வழங்கப் படுகிறது. அரசு நிதி வழங்குவதை, அ.தி.மு.க., நிதியிலிருந்து வழங்குவது போல, டோக்கன் வழங்குகின்றனர். தமிழகம் முழுதும், இதே நிலை உள்ளது. இது, மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, 2,500 ரூபாயை, ரேஷன் கடை ஊழியர்கள் வழியாக வழங்க வேண்டும்.இதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நீதிமன்றம் செல்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE