ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் குறைவால் இந்த ஆண்டும் 58-ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து 32 கி.மீ. துாரத்தில் உள்ள கிராமங்களின் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 58 ம் கால்வாய் திட்டம் துவக்கப்பட்டது. அணை நீர் மட்டம் 67 அடி உயரும் போது 58-ம் கால்வாய் மதகு வழியாக தண்ணீர் வெளியேறும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அணை நீர் மட்டம் அதிகபட்சம் 63 அடி வரை மட்டுமே உயர்ந்தது.(மொத்த உயரம் 71 அடி). அணையில் இருந்து மதுரை திண்டுக்கல் சிவகங்கை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டதால் அணை நீர் மட்டம் குறைந்தது. மழையும் குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது.
நேற்றைய நிலவரப்படி 59.58 அடியாக இருந்தது.விவசாயிகள் கூறியதாவது: இந்த ஆண்டு வைகை அணை நீர் மட்டம் முழு அளவை எட்டும் 58-ம் கால்வாய் மூலம் நீர் கிடைக்கும் என காத்திருந்தனர். இத்திட்டத்தில் தேனி மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் 110 கிராம விவசாயிகள் பலன் பெறுவர். நேரடி பாசனம் இல்லா விட்டாலும் கால்வாய் செல்லும் வழியில் உள்ள 33 கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயம் செழிக்கும். ஆனால் கால்வாயில் சில நாட்கள் கூட நீர் திறக்க முடியாது போனதால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE