சென்னை : கார்டுதாரர்கள், 2,500 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசை, தங்களின் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடையில் மட்டுமே வாங்க முடியும்.
'ஒரே நாடு; ஒரே ரேஷன்' கார்டு திட்டப்படி, தமிழகத்திற்குள் வசிக்கும் கார்டுதாரர்கள், மாநிலத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம், அக்டோபர் முதல் செயல்படுத்தப்பட்டது.ஆனால், ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்யும், 'சர்வரில்' பாதிப்பு ஏற்பட்டதால், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சமீபத்தில், மீண்டும் செயல்படுத்தப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பு, வரும், 4ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்குவது போல, பரிசு தொகுப்பையும், எந்த கடையிலும் வாங்கலாமா என்ற சந்தேகம், கார்டுதாரர்களிடம் எழுந்துள்ளது. பலரும் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதால், அதுபோன்று அனுமதிக்க வேண்டும் என்ற, கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ், கடைகளுக்கு, ஏற்கனவே ஒதுக்குவதை விட, 5 சதவீத பொருட்கள் கூடுதலாக அனுப்பப்படுகின்றன. அவற்றை, வேறு கார்டுதாரர்கள் வாங்கவில்லை என்றாலும், கடையிலேயே இருக்கும்.ரொக்க பணத்தை கையாள்வது சிரமம். கூடுதல் பணம் வழங்கினால், 'தொலைந்து விட்டது' என, கூறவும் வாய்ப்புள்ளது. அதை தடுக்கும் வகையில், கார்டுதாரர்கள் தங்களின் முகவரிக்கு ஒதுக்கிய ரேஷன் கடையில் தான், 2,500 ரூபாய் பொங்கல் பரிசை வாங்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE