சிவகங்கை : சிவகங்கையில் அதிகாரிகள் டார்ச்சரால் பி.டி.ஓ., ரமேஷ் 58, கழுத்தில் கத்தியால் அறுத்ததில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிவகங்கை செந்தமிழ்நகர், சிலம்பு தெரு ரமேஷ். ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வேலை உறுதி திட்ட பி.டி.ஓ.,வாக பணிபுரிகிறார். 6 மாதத்திற்கு முன் ஓய்வு பெற இருந்த நிலையில், ஓய்வு கால நீட்டிப்பால் தொடர்ந்து பணிபுரிகிறார். உயர் அதிகாரிகள் தொடர்ந்து 'டார்ச்சர்' கொடுத்ததில் மனமுடைந்த ரமேஷ், நேற்று காலை 8:35 மணிக்கு வீட்டிற்கு அருகே உள்ள முட்புதரில் கத்தியால் கழுத்தில் குத்தியும், கழுத்தை அறுத்தும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உணவு குழாய் பாதிக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
திட்ட இயக்குனர் மீது புகார்இவரது மனைவி தமிழ்செல்வி. தனியார் பள்ளி ஆசிரியை. தமிழ்செல்வி போலீசில் அளித்த புகாரில், டிச. 26 அன்று இரவு 10:00 மணிக்கு அவரது அலைபேசிக்கு போன் வந்தது. திட்ட இயக்குனர் வடிவேல், உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் ஆகியோர் பேசியதையடுத்து மனதளவில் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், கழுத்தில் தானே கத்தியால் குத்திக்கொண்டார். இவரை தற்கொலைக்கு துாண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., முருகானந்தம் விசாரிக்கின்றனர்.திட்ட இயக்குனர் வடிவேல் கூறும்போது, 'அவரை யார் டார்ச்சர் செய்தார்கள் என விசாரித்து வருகிறோம்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE