காத்மாண்டு : நேபாளத்தில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்யும் நோக்கத்தில், நேபாளம் வந்துள்ள சீன உயர்மட்ட குழுவினர், பிரதமருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள, புஷ்ப கமல் தாஹால் பிரசந்தாவை, நேற்று சந்தித்து பேசினர்.
நம் அண்டை நாடான, நேபாளத்தில், 2018ல், சர்மா ஒலி தலைமையிலான, சி.பி.என்.யு.எம்.எல்., மற்றும் முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தாஹால் பிரசந்தா தலைமையிலான, சி.பி.என்.மாவோயிஸ்ட் மையம் இணைந்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. பிரதமராக சர்மா ஒலி பதவியேற்றார். கட்சியின் தலைவராக சர்மா ஒலியும், துணைத் தலைவராக பிரசந்தாவும் பதவி வகித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் இரு அணிகளாகவே செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, இரு தரப்புக்கு இடையே மோதல் அதிகரித்தது.
கடும் அதிருப்தி : சமீபத்தில், பிரதமர் ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பார்லிமென்டை முன்கூட்டியே கலைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, பார்லி.,யை கலைத்து, அதிபர் உத்தரவிட்டார்.பார்லி.,யை கலைக்கும் ஒலியின் முடிவு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பின், பிரசந்தா தலைமையில் நடந்த கூட்டத்தில், கட்சி தலைவர் பதவியிலிருந்து ஒலி நீக்கப்பட்டு, புதிய தலைவராக மாதவ் குமார் நேபாள் நியமிக்கப்பட்டார். கட்சியின் பார்லி., குழு தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ஒலி நீக்கப்பட்டு, புதிய தலைவராக பிரசந்தா தேர்வு செய்யப்பட்டார். நேபாள கம்யூ., கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, கட்சி உடைவதை தடுக்கும் முயற்சிகளில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஈடுபட்டுள்ளார். அவரது உத்தரவின் படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சர் குவோ யெஸோ தலைமையிலான நான்கு பேர் அடங்கிய சீன உயர்மட்ட குழு, நேற்று முன் தினம் நேபாளம் வந்தது. உயர்மட்ட குழுஅவர்கள், பிரதமர் ஒலி மற்றும் அதிபர் பித்யா தேவி ஆகியோரை, தனித்தனியாக நேற்று முன் தினம் சந்தித்து பேசினர். கட்சி தலைவராக பிரதமர் ஒலிக்கு பதிலாக தேர்வாகியுள்ள மாதவ் நேபாளையும் சந்தித்து பேசினர்.இந்நிலையில், நேபாள கம்யூ., கட்சியின் பார்லி., குழு தலைவரான பிரசந்தாவை நேற்று சந்தித்து, உயர்மட்ட குழுவினர் பேச்சு நடத்தினர். கட்சிக்குள் ஏற்பட்டு உள்ள பிளவை சரி செய்ய, சீன குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE