ராமநாதபுரம் : ராமநாதபுரம் சாலைத்தெருவில் ஒருவாரமாக பாதாள சாக்கடை அடைப்பு சரிசெய்யாததால் வீடு, கடைகளுக்குள் கழிவுநீர் தேங்கியதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்பு பகுதியை சுற்றி தேங்குகிறது.கழிவுநீர் கிணற்றுக்குள் இறங்கி விடுவதால் அன்றாட தேவைக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.மேலும் ராமநாதபுரம் முதுநாள் வடக்கு புதுத் தெருவில் பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்ட அடைப்பால் சாக்கடை நீர் ரோட்டில் ஓடுகிறது.கழிவு நீர் முகவை ஊரணிக்கு செல்லும் கால்வாயில் கலப்பதால் நகரின் குடிநீர் ஆதாரமான முகவை ஊரணி மாசுபடும் அபாயம் உள்ளது.சாலைத்தெரு இப்திகார் கூறுகையில்,வீட்டின் காம்பவுண்ட் வளாகத்திற்குள் ஒரு வாரமாக கழிவுநீர் சூழ்ந்துள்ளது,
இதனால் கதவு, ஜன்னல்களை பூட்டிவைத்துள்ளோம். கொசுத்தொல்லை, துர்நாற்றத்தினால் துாங்க முடியாமல் சிரமப்படுகிறோம், சாக்கடை அடைப்பு சரிசெய்து, கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றார்.ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் நிலேஸ்வர் கூறுகையில்,பாதாள சாக்கடை அடைப்புகள் சரி செய்யப்படுகிறது, சாலைத்தெருவில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.-------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE