லக்னோ: உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு பிராந்தியத்தின் பிரத்யேக சரக்கு ரயில் வழித் தடத்தில், சரக்கு ரயில் சேவையை, பிரதமர் மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.
உ.பி.,யில், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்கு சரக்கு ரயில் தடச் சேவை திட்டத்தின் கீழ், 5,750 கோடி ரூபாய் செலவில், குர்ஜா - பாவ்புர் இடையே, சரக்கு ரயில் போக்குவரத்திற்காக, 351 கி.மீ., துாரத்திற்கு பிரத்யேக ரயில் வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித் தடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த, பிரதமர் மோடி, பிரயாக்ராஜ் நகரில் அமைக்கப்பட்டுள்ள, மேற்கு சரக்கு ரயில் தடச் சேவை கட்டுப்பாட்டு நிலையத்தை திறந்து வைத்து, சரக்கு ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது:
கடந்த, 2006ல் முந்தைய அரசு, மேற்கு சரக்கு ரயில் தடச் சேவைக்கு அனுமதி வழங்கியது. ஆனால், திட்டம் ஆவண வடிவிலேயே இருந்தது. கடந்த, 2014 வரை, 1 கி.மீ., ரயில் பாதை கூட போடப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியும் சரிவர செலவிடப்படவில்லை. மத்தியில், 2014ல் பா.ஜ., அரசு அமைந்த பின், நானே நேரடியாக, இத்திட்டத்தில் கவனம் செலுத்தி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், அடுத்த சில மாதங்களில், 1,100 கி.மீ., ரயில் தடச் சாலைப் பணிகள் முடிவடைய உள்ளன.
முந்தைய ஆட்சியில், தேர்தல் ஆதாயத்திற்காக, ஏராளமான ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதற்கு தேவையான முதலீடு இல்லாததால், செயல்பாட்டிற்கு வரவில்லை. ரயில்வே துறையை நவீனமயமாக்க, கடந்த ஆட்சியில் அக்கறை காட்டவில்லை. குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆளில்லா கடவுப் பாதைகள் ஆபத்துப் பகுதிகளாக இருந்தன. இத்தகைய மோசமான பணிச் சூழலை, நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் மாற்றிக் காட்டினோம். ரயில்வே பட்ஜெட் முறை ஒழிக்கப்பட்டது.
ரயில் தடங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில் போக்குவரத்து நவீன மயமாக்கப்பட்டது. நாட்டில், ஆளில்லா கடவுப் பாதைகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்கள் தற்போது கண்கூடாகத் தெரிகின்றன. இந்த புதிய சரக்கு ரயில் தடச் சேவை, 'தற்சார்பு பாரதம்' என்ற, கர்ஜனையுடன் இன்று துவங்கியுள்ளது. இதனால், உ.பி.,யில், ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.
இவ்வாறு, அவர் பேசினார்.ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் பேசுகையில், ''இந்த பிரத்யேக சரக்கு ரயில் தடத்தில், ரயில்கள், சரக்குகளை எடுத்துச் செல்வது மட்டுமின்றி, அந்தந்த பகுதிகளின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE