சென்னை :'என்னை மன்னியுங்கள்; நான் கட்சி தொடங்கப் போவதில்லை' என, நடிகர் ரஜினி, நேற்று திடீரென அறிவித்தார். தன் உடல் நிலையை காரணம் காட்டி, மூன்றாண்டு இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
'தமிழகத்தில், சிஸ்டம் சரியில்லை. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும்; இப்போது இல்லேன்னா எப்பவுமே இல்லை' எனக் கூறி, 2017 இறுதியில், அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தார், நடிகர் ரஜினி. தன் ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றி, நிர்வாகிகளை நியமித்து, தொகுதிதோறும், 'பூத் கமிட்டி' உறுப்பினர்களையும் நியமித்தார்.
மாறுபாடு
அடுத்த சில மாதங்களில், 'மத்தியில் எழுச்சி உருவாக வேண்டும்; அது, எனக்கு தெரிய வேண்டும். அப்படியே கட்சி ஆரம்பித்தாலும், முதல்வராக நான் அமர மாட்டேன்' என, நிபந்தனை விதித்தார்.இது தொடர்பான விவாதம் நடந்து வந்த நிலையில், நவம்பரில், கட்சி ஆரம்பிப்பதில் திடீர் சுறுசுறுப்பு காட்டிய ரஜினி, தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனமூர்த்தியை, பொறுப்பாளர்களாக நியமித்தார். அவர்களின் கீழ் கட்சிப் பணிகள், ஜரூராக நடந்து வந்தன.
வரும், 31ம் தேதி, கட்சி அறிவிப்பை வெளியிடப் போவதாக கூறிய ரஜினி, 14ம் தேதி, ஐதராபாத்தில் நடந்த, 'அண்ணாத்த' படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு படக் குழுவினர் நால்வருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு இல்லை என்ற போதிலும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி, சிகிச்சை பெற்ற ரஜினி, 27ம் தேதி, சென்னை திரும்பினார்.
பாதிக்கும்
கட்சி பெயர் மற்றும் சின்னத்தை, 'டுவிட்டரில்' அறிவிப்பார் என, தகவல் வெளியான நிலையில், நேற்று, அதே டுவிட்டரில், 'என்னை மன்னித்து விடுங்கள்' என உருக்கமாக எழுதிய, மூன்று பக்க கடிதத்தை வெளியிட்டார்.
அதில், ரஜினி கூறியிருப்பதாவது:என்னை வாழவைக்கும் தெய்வங்களான, தமிழக மக்களுக்கு என் அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சி துவங்குவேன் என அறிவித்து, மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி, 'அண்ணாத்த' படப்பிடிப்பில் பங்கேற்க, ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட, 120 பேர் அடங்கிய படக் குழுவினருக்கு, தினமும் கொரோனா பரிசோதனை செய்து, ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும், நால்வருக்கு கொரோனா இருக்கிறது என, தெரிய வந்தது. உடனே இயக்குனர், படப்பிடிப்பை நிறுத்தி, எனக்கு உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா, 'நெகடிவ்' வந்தது. ஆனால், எனக்கு ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத்தாழ்வு இருந்தது.
மருத்துவ ரீதியாக, எக்காரணத்தை கொண்டும், எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது; அது, என் மாற்று சீறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். என் மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர்களின் மேற்பார்வையில், மூன்று நாட்கள் மருத்துவமனையில், கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.
எச்சரிக்கை
என் உடல்நிலை கருதி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம், என் உடல்நிலை. இதை, ஆண்டவன் எனக்கு கொடுத்த, ஒரு எச்சரிக்கையாக தான் பார்க்கிறேன்.நான் கட்சி ஆரம்பித்த பின், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக மட்டும் பிரசாரம் செய்தால், மக்கள் மத்தியில், நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி, தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது.
பலிகடா
இந்த எதார்த்தத்தை, அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்க மாட்டார்கள். நான் மக்களை சந்தித்து, கூட்டங்களை கூட்டி, பிரசாரத்திற்கு சென்று, ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது.
இப்போது, இந்த கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று, இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி வந்தால் கூட, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் எனக்கு, பிரசாரத்தின்போது பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி வந்து, என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள், பல சிக்கல்களையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்; மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.
'என் உயிர் போனாலும் பரவாயில்லை; நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன்; நான் அரசியலுக்கு வருவேன்' என சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என சொன்னால், நாலு பேர் நாலு விதமாக பேசுவர்; அதற்காக, என்னை நம்பி, என் கூட வருபவர்களை, நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
சம்மதமே
அதனால், நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை, மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது, எனக்கு ஏற்பட்ட வலி; எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு, ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை தரும்; என்னை மன்னியுங்கள்.
மக்கள் மன்றத்தினர், மூன்று ஆண்டுகளாக, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், கொரோனா காலத்திலும், தொடர்ந்து மக்கள் சேவை செய்துள்ளனர்; அது, வீண் போகாது. அந்த புண்ணியம், என்றும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்.
கடந்த, நவ., 30ம் தேதி, நான் உங்களை சந்தித்தபோது, நீங்கள் எல்லாரும் ஒருமனதாக, ‛உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், எங்களுக்கு சம்மதமே' என, சொன்ன வார்த்தைகளை, என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
நீங்கள் என் மேல் வைத்துள்ள அன்புக்கும், பாசத்திற்கும் தலைவணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும்போல் செயல்படும். மூன்று ஆண்டுகளாக, எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து, என்னை ஆதரித்து, 'முதலில் உங்கள் உடல்நலத்தை கவனியுங்கள்; அதுதான் எங்களுக்கு முக்கியம்' என, அன்புடன் கூறிய தமிழருவி மணியனுக்கு மனமார்ந்த நன்றி.
நன்றி
நான் கேட்டுக் கொண்டதற்காக, ஒரு பெரிய கட்சியின் பொறுப்பான பதவியிலிருந்து விலகி, என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த, அர்ஜுனமூர்த்திக்கும் நன்றி.தேர்தல் அரசியலுக்கு வராமல், மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ, அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என் மேல் அன்பு கொண்ட ரசிகர்களும், தமிழக மக்களும், என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, ரஜினி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE