பீஜிங்:ஓராண்டுக்கு முன், கொரோனா தொற்று பரவ துவங்கிய சீனாவின் வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் பணி துவங்கிஉள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின், ஹுபெய் மாகாண தலைநகரான வூஹானில், கடந்தாண்டு, டிசம்பர், 31ல், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, 1.10 கோடி மக்கள் தொகை உடைய வூஹான் நகரில், ஜன., 23ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொற்று பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, ஹுபெய் மாகாணம் முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.
ஹுபெயில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, ஏப்ரல், 8ல் ஊரடங்கு தளர்த்தப் பட்டது. ஹுபெய் மாகாணத்தில், இதுவரை, 68 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில், வூஹானில் மட்டும், 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
மே மாதம், வூஹான் நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை சீன அரசு மேற்கொண்டது. இதில், மிக சிறிய எண்ணிக்கையிலேயே தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மிகப் பெரிய அளவிலான கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை, சீன அரசு மேற்கொண்டது.
இதில், பீஜிங்கை சேர்ந்த, 27 பேருக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதியானது.சீன தயாரிப்பான, 11 தடுப்பூசிகள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சோதனையில் உள்ளன. இந்நிலையில், கொரோனா பரவ துவங்கிய வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் பணியை, அந்நாட்டு அரசு, சமீபத்தில் துவக்கியது.
ஹுபெய் மாகாணத்தின், 15 மாவட்டங்களில் உள்ள, 48 முகாம்களில், 18 - 59 வயது வரையிலான, சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும், அவசரகால தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாக, வூஹான் நகர நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய அதிகாரி தெரிவித்தார். 'தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள், ஒரு மாத காலத்திற்குள், மேலும் இரண்டு, 'டோஸ்' மருந்துகளை செலுத்திக் கொள்ள வேண்டும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE