அயோத்தி, :உ.பி.யில் ராமர் கோவில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்து ஆறு லட்சம் ரூபாய் இரண்டு போலி காசோலைகள் மூலம் மஹாராஷ்டிராவின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள ஒரு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அடுத்து 9.86 லட்சம் ரூபாய்க்கு போலி காசோலை வாயிலாக பணம் மாற்ற முயன்றபோது வங்கி ஊழியர் சந்தேகம் அடைந்து ராமர் கோவில் அறக்கட்டளை செயலர் சம்பத் ராயை தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது அதுபோன்ற காசோலை எதுவும் வழங்கவில்லை என அவர் தெரிவித்ததை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆறு லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக மும்பை மற்றும் தானேயைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட நபர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE