அறிக்கையை தாண்டிய அரசியல் காரணம்
ரஜினி அரசியலுக்கு வராததற்கு ஏற்கனவே கூறிய காரணங்களையேஇப்போதும் கூறியுள்ளார். இந்த காரணங்களை என்னால் ஏற்கமுடியவில்லை. நவ., 30 நிர்வாகிகளிடம் ரஜினி பேசிய
தகவலின்படி அரசியலுக்கு வரமாட்டார் என்ற யூகம் இருந்தது.
அக்., 7 அவர் பெயரில் வந்த அறிக்கையை மறுத்தார். அதில் உள்ள விஷயங்கள் உண்மை
என்றார்.
டிச., 3 தமிழருவிமணியனை மேற்பார்வையாளராக, அர்ஜூன் மூர்த்தியை
ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். அப்போதே வரவில்லை என்று கூறி இருக்கலாம் ஆனால், வருவேன்என்றார். இப்போது ரஜினி அரசியலுக்கு வராததற்கு அவர் அறிக்கையில் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை. அதைதாண்டி ஒரு அரசியல் காரணம் உள்ளது. மிகப்பெரிய
மூன்றாவது சக்தியாக வருவார் என தி.மு.க., அ.தி.மு.க., ரஜினியைதாக்கி பேசினர். அவர்
தற்போது நடிக்கும் படம் கூட கருணாநிதி குடும்பம் தொடர்புடைய நபரின் படம்தான். அங்கு என்னநடந்தது என்று தெரியாது. இனி இரண்டு கழகங்களுக்கு இடையிலான அரசியல்
மட்டுமே நடக்கும்.
மூன்றாவது பெரிய சக்தி உருவாகாது.
- கோலாகல ஸ்ரீநிவாஸ்
அரசியல் விமர்சகர்.
மற்ற கட்சிகளுக்கு மகிழ்ச்சி
முதலில் 'போர் வரும் போது பார்க்கலாம்' என்று ரஜினி சொல்லி வந்தார். ஒரு கட்டத்தில் போர் நெருங்கியது. பங்கேற்கும் நேரத்தில் அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இதை
கருத்தில் கொண்டு போரில் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டுள்ளார். 'கட்சி துவங்குவேன்' என ரஜினி அறிவித்த போது பல கட்சிகள் கலக்கம் அடைந்தன.
முதன்முறையாக போட்டிக்கு வருவதால், அவருக்கு ஓட்டு கிடைக்குமா, கிடைக்காதா,
எவ்வளவு ஓட்டு பெறுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு வேளை கணிசமான ஓட்டுகளை வேட்டையாடினால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மற்றகட்சியினர் அச்சத்தில்இருந்தனர்.
தற்போது அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தியை ரஜினி அறிவித்திருக்கிறார். இனி களத்தில் நிற்கும் கட்சிகள் எல்லாம் வழக்கமானவை. போட்டியும் வழக்கம் போல் இருக்கும்.
-பானுகோம்ஸ்
அரசியல் விமர்சகர்
இப்போதாவது அறிவித்தாரே
ரஜினியின் அறிவிப்பு நான் எதிர்பார்த்தது தான். எத்தனையோ முறை நானே இதுகுறித்து
தெரிவித்திருக்கிறேன். இதை முன்கூட்டியே ரஜினி அறிவித்திருக்கலாம். ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். ஆண்டுகளையும்மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்போதாவதுஅறிவித்தாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை.அவரது அறிவிப்புக்கு நன்றி. ரஜினி பூரண நலத்துடன் நீடுழி வாழவாழ்த்துகிறேன்.
-கஸ்துாரி, நடிகை
ரஜினி ரசிகர்கள் கமலை ஆதரித்தால் வரவேற்போம்
கமலை பொறுத்தவரை ரஜினியின் உடல் நலம் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 'எல்லா சந்தர்ப்பங்களும் ஒன்றிணைந்தால் நானும் ரஜினியும் கை கோர்ப்போம்' என வெளிப்படையாகவே கமல் தெரிவித்திருந்தார். ரஜினி சொல்லியிருக்கிற காரணம் உடல் நிலை. இதனால் அதன் மீது விவாதம் செய்ய கூடாது. ஆனால் அதையும் மீறி அவர் உடல் மீது கொண்ட அன்பால் அவர் என்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.
ரஜினி வந்தால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதை அவரது ரசிகர்கள்
மட்டுமல்ல கமலும் நம்பியிருந்தார். அந்த வகையில் அவரின் இந்த அறிவிப்பை ஏமாற்றமாகவே கருதுகிறோம்.உடல் ரீதியான காரணமாக இருந்தால்பின்புலம் குறித்து
பேசுவது ஆரோக்கியமாக இருக்காது.
சினிமாவில் ரஜினி,- கமல் இரு துருவங்களாக பயணித்தனர். அவர்கள் ரசிகர்களும் போட்டி போட்டு தலைவர்களை கவுரவப்படுத்தினர். ஆனால் அதையும் தாண்டி பொது வாழ்க்கை,
அரசியலில் அவர்கள் நண்பர்களாகவே உள்ளனர். தமிழக அரசியலில் தி.மு.க., அ.தி.மு.க.,
விடமிருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்பது தான் இவர்கள் இருவரின் நிலைப்பாடு. ரஜினி
ரசிகர்களின் என்ன ஆவார்கள் என்பது அவர்களின் எண்ண அலைகள் தான் நிர்ணயிக்கும். அவை கூட மாற்றத்தை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் அவரது ஆத்ம நண்பனான கமலை ஆதரிக்கும் மனநிலை உருவாகும் வாய்ப்பு இருந்தால் வரவேற்போம்.
-கவிஞர் சினேகன்
இளைஞரணி செயலாளர், ம.நீ.ம.,
வந்திருந்தால் வென்றிருப்பார்
ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பு நேர்ந்திருக்கும். ரஜினி வருகையால் தங்களுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதில் தி.மு.க., தெளிவாக இருந்தது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, ரஜினி வந்தால் அனைத்து சமூகங்களும் பரவலாக பயனடையும்படி சமூகநீதியை கொடுத்துவிடுவார் என கருதி, இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை ஸ்டாலின் நியமித்தார்.
சீமான் போன்றவர்கள் சிறியஎண்ணிக்கையிலான ஜாதியினர்ஓட்டை ரஜினி தட்டிப் பறித்துவிடுவார் என்பதால் அவரை எதிர்த்தனர். கமலுக்கு விழக்கூடிய பிற மொழியாளர்கள் ஓட்டு பாதிக்கப்பட்டிருக்கலாம். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி ஓட்டு வங்கியும் பாதித்திருக்கும்.
இப்போது ரஜினி வரவில்லை என்பது அனைத்து கட்சிகளுக்குமே நிம்மதியை அளித்துள்ளது. வந்திருந்தால் ரஜினி நிச்சயம் வென்றிருப்பார்.
-ரவீந்திரன் துரைசாமி
அரசியல் விமர்சகர்
முடிவுக்கு வந்த ரஜினி அரசியல்
* 1995: முத்து படத்தில், 'நான் எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்தில் வருவேன்' என, பஞ்ச் டயலாக் பேசி, முதன்முதலாக தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார் ரஜினி.
* 2017 மே: சென்னையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
* டிச., 31: அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மிக அரசியலை முன்னெடுப்போம். தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு.
* 2019: லோக்சபா தேர்தலின் போது, 'சொன்னதை செய்வேன். எங்களின் இலக்கு சட்டசபை
தேர்தல் தான்' என்றார்.
* 2020 மார்ச், 5: மாவட்ட செயலர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு பின் பேசிய இவர், 'என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்' என்றார்.
* மார்ச், 12: 'கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை' என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்தார்.
* அக்., 29: தன் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு பதிலளித்த ரஜினி, அது,
என்னுடைய அறிக்கை அல்ல; ஆனால், அதிலுள்ள தகவல் உண்மை என்றார்.
* நவ., 30: மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை.
* டிச., 3: ஜனவரியில் கட்சி துவங்குவதாகவும், டிச., 31ல் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
* டிச., 29: உடல்நிலை காரணமாக கட்சி தொடங்க முடியாது என ரஜினி அறிவிப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE