மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே, ரேஷன் கடையின் ஜன்னலை, யானை உடைத்து சேதப்படுத்தியது. இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.பெத்திக்குட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்டு, சிறுமுகை அடுத்த சம்பரவள்ளியில், பகுதிநேர ரேஷன் கடை உள்ளது. கூத்தாமண்டி, அம்மன்புதுார், சம்பரவள்ளி, பால்காரன் சாலை ஆகிய பகுதி மக்களுக்கு, இங்கு பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.கடந்த ஒரு வாரமாக, பெத்திக்குட்டை வனப்பகுதியில் சுற்றிவந்த ஒற்றை ஆண் யானை, நேற்று முன்தினம் இரவு, ரேஷன் கடையின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியது. தகவலறிந்த சிறுமுகை வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'யானை மீண்டும் வர வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர், இப்பகுதிக்கு யானை வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ''பெத்திக்குட்டை பகுதியில், வனத்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து, விரட்டும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE