கோல்கட்டா: பணத்தை வைத்து மிகவும் அழுகிய எம்.எல்.ஏ.,க்களை வாங்குவதால், திரிணமுல் காங்., கட்சியையே வாங்கியதாக நினைக்க வேண்டாம் என பாஜ.,வை மே.வங்க முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார்.
மேற்குவங்கத்தில் சமீபத்தில் திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.,க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போல்பூரில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: வெளியில் இருந்து வந்தவர்கள் (பா.ஜ.,) வெறுப்பு அரசியலையும், போலியான அரசியலையும் கொண்டு வந்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் முதுகெலும்பைச் சிதைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், ரவிந்திரநாத் தாகூர் மண்ணில் அதுபோன்று ஏதும் நடக்காது.

பணத்தை வைத்து எம்.எல்.ஏ.,க்களை வாங்குவதால் அதுவும் அழுகிய எம்.எல்.ஏ.,க்களை வாங்குவதால், திரிணமுல் காங்., கட்சியையே வாங்கியதாக நினைக்கிறீர்களா?. நீங்கள் (பா.ஜ.,) முதலில் 30 இடங்களில் வெல்லுங்கள், பிறகு 294 இடங்களில் வெற்றிப் பெறுவதைப்பற்றி பார்க்கலாம். மஹாத்மா காந்தி போன்ற மதிப்புமிக்க பல்வேறு தலைவர்கள் மீது மதிப்பு இல்லாதவர்கள்தான் வங்கத்தைத் தங்கமாக மாற்றுவோம் எனப் பேசுகிறார்கள். ஆனால், மே.வங்கம் ஏற்கெனவே தங்கமாகத்தான் இருக்கிறது. இதை ரவீந்திரநாத் தாகூர் ஒரு கவிதையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இப்போது நாம் செய்ய வேண்டியது, பாஜ.,வின் வகுப்புவாதத்தில் இருந்து மாநிலத்தைக் காக்க வேண்டும். விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பா.ஜ.,வை சேர்ந்தவர். இந்தப் பல்கலையில் வகுப்புவாத அரசியல் வந்துள்ளதை நினைத்து வேதனைப்படுகிறேன். பாரம்பரியமிக்க இந்தப் பல்கலை வளாகத்தில் பிரிவினைவாதம், வகுப்புவாதத்தைக் கொண்டுவந்து சிதைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், ரவீந்திரநாத் தாகூரின் மண் ஒருபோதும் மதச்சார்பின்மையை அழித்துவிட்டு வகுப்புவாத அரசியலை மேலே வர இடம் அளிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE