சென்னை:தமிழக அரசு தொடர்ந்த, ஆறு அவதுாறு வழக்குகள் விசாரணைக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜரானார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது, தமிழக அரசு சார்பில், ஆறு அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.இது தொடர்பான விசாரணை, சென்னையில் உள்ள, எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ரவி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜாரானார். அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் காயத்ரி வாதாடினார்.
ஸ்டாலின் தரப்பில், வழக்கறிஞர் குமரேசன் வாதாடினார்.வழக்குகள் தொடர்பான ஆவண நகல்கள், ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டன. விசாரணையை, ஜன., 29க்கு நீதிபதி தள்ளி வைத்தார். சிறப்பு நீதிமன்றத்திற்கு, நேற்று காலை, 10:20 மணிக்கு ஸ்டாலின் வந்தார். அப்போது, வழக்கறிஞர்கள் அமரும் நாற்காலியில், அவர் அமர்ந்திருந்தார். விசாரணை துவங்கும் நேரத்தில், நீதிமன்ற அறைக்குள் வந்த நீதிபதி, ஸ்டாலின் அமர்ந்து இருந்ததை பார்த்தார்.
'நீங்கள் இங்கே அமரக் கூடாது. பார்வையாளர்கள் இருக்கையில் அமருங்கள்' எனக் கூறினார். இதையடுத்து, ஸ்டாலின், பார்வையாளர்கள் இருக்கையில் மாறி அமர்ந்தார்.
இளங்கோவனுக்கு நிம்மதி
கடந்த, 2016ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் மீது, தமிழக அரசு சார்பில், நான்கு அவதுாறு வழக்குகள் தொடரப் பட்டன. இந்த வழக்குகளும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தன.
இந்த அவதுாறு வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம், இம்மாதம், 16ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, இளங்கோவன் மீதான அவதுாறு வழக்குகளை முடித்து வைத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE