உடுமலை : பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், அரசாணிக்காய் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு உணவில், அரசாணிக்காய் பிரதான இடம் பிடிக்கிறது. இதனை எதிர்பார்த்து, உடுமலை பகுதிகளில், ஆண்டியக்கவுண்டனுார், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, பெரியகோட்டை, கண்ணமநாயக்கனுார், வாளவாடி, எரிசனம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அரசாணிக்காய் சாகுபடிசெய்யப்படுகிறது.
புரட்டாசி பட்டம் அரசாணிக்காய்க்கு உகந்ததாக உள்ளதால், இப்பருவத்தில் அதிகளவு பயிரிடப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு தயாராகிறது. இக்காய் நாட்டு ரகமாக உள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அதிகளவு விற்பனைக்கு செல்கிறது.பொங்கல் பண்டிகை நெருங்குவதால், உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட அரசாணிக்காய், அறுவடை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு செல்வதால், சந்தைக்கும் வரத்து அதிகரித்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'வட மாநிலங்களுக்கு அதிகளவு விற்பனைக்கு செல்லும் நிலையில், பொங்கல் பண்டிகைக்காக உள்ளூர் விற்பனையும் அதிகரிக்கும். தற்போது துவங்கியுள்ள அறுவடை சீசன் இரண்டு மாதம் வரை நீடிக்கும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE