திருப்பூர் : பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியை, தபால்துறையின் மூலம் பெற்று கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தபால் வங்கி கிளை மேலாளர் பிரின்ஸ் கூறியதாவது:தபால்துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியா போஸ்டல் பேமண்ட் வங்கி, ஆதார் சார்ந்த பரிவர்த்தனை சேவையை வழங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 500க்கும் மேற்பட்ட கிராம தபால் ஊழியர்கள், தபால்காரர்கள் கையடக்க கருவியை பயன்படுத்தி, டிஜிட்டல் கைரேகை மூலம் வங்கி சேவை வழங்கி வருகின்றனர்.
இதன்கீழ், வாடிக்கையாளர்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கிக்கணக்கில் இருந்தும், நாளொன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் எடுக்கலாம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் அனைத்து சமூக பாதுகாப்புத்திட்ட பயனாளிகள் இதில் பயனடைகின்றனர்.
தற்போது, விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ், நாடு முழுதும், ஒன்பது கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிலும், 2,000 ரூபாய் வரவு வைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கான தொகையை, தபால் வங்கியின் ஆதார் பரிவர்த்தனை முறை மூலம் வீட்டில் இருந்தே பெறலாம். இதற்கு, தபால் நிலையம் அல்லது தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE