மதுரை, : மதுரையில் சங்க கொடி, பிளக்ஸ் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர்களுக்குள் மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர புகார் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில தலைவர் அன்பரசு, பொது செயலாளர் செல்வம் தலைமையில் செயல்படுகிறது. இதற்கிடையில் திருச்சியில் கடந்த வாரம் அரசு ஊழியர்கள் சங்கம் பெயரில் ஊழியர்கள் கூடினர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மத்திய அரசுக்கு இணையாக பொங்கல் போனஸ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரேஸ்கோர்ஸ் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட முயன்றனர்.
ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா தலைமையில் சில நிர்வாகிகள் சங்க கொடியை ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்த எதிர்த்தனர். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தாக்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பை சேர்ந்த தமிழ், ராஜா காயமுற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாரியப்பன், மணிகண்டன் கூறியதாவது: திருச்சியில் அரசு ஊழியர் சங்கத்தினர் முன்னாள் மாநில துணை தலைவர் தமிழ்செல்வி தலைமையில் கூடினோம். மாநில முன்னாள் துணை தலைவர் குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்ட முடிவின்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ராஜாவை தாக்கினர். நாங்கள் தான் உண்மையான அரசு ஊழியர் சங்கத்தினர். நடந்த சம்பவம் நீதிமன்ற கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அதை கைப்பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும், என்றனர்.அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா கூறுகையில், ''எதிர்தரப்பினர் சங்கத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள். அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு பெயரில் செயல்பட்டனர். தற்போது அரசு ஊழியர் சங்க பெயரை பயன்படுத்துகின்றனர். எங்கள் கொடி, பிளக்ஸ், பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தோம். அவர்கள் சட்ட விரோதமாக பயன்படுத்தியதை தடுக்க முயன்றோம். அவர்கள் தாக்கியதில் தமிழ் காயமுற்று அரசு மருத்துவமனையில் உள்ளார். போலீஸ் கமிஷனர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE