கோபி:''பழைய இரும்பு கடையில், அரசின் இலவச புத்தகங்கள் விற்பனை செய்யவில்லை,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அவர் கூறியதாவது:பொதுத்தேர்வை நடத்துவது மற்றும் அத்தேர்வர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து, கல்வித் துறை மூலம் ஆய்வு செய்து, முடிவு செய்துள்ளோம். முதல்வரின் ஒப்புதல் பெற்று, பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.
பாடநுால் கழகத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மீதமானால், கல்வித் துறை மூலம், கரூரில் உள்ள காகித ஆலைக்கு அனுப்புகிறோம். தனியார் பள்ளியோ அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கமோ, பாடநுால் கழகத்தில், புத்தகத்தை விலை கொடுத்து, வாங்கும் வசதி ஏற்கனவே உள்ளது.
அதேபோன்று தான், மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடை வியாபாரியும், புத்தகங்களை வாங்கி, விற்பனை செய்துள்ளார்.அரசு பள்ளியில், புத்தகம் விற்பனை குறித்து, எந்த தவறும் நடக்கவில்லை. இதையே பெரிய குற்றச்சாட்டாக கூறுகின்றனர். விபரம் அறிந்தவர்கள், குறை கூற மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE