சென்னை:''கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளை காட்டிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் கைகொடுக்கும்,'' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறினார்.
சென்னை, கிண்டியில் உள்ள, மருத்துவ பல்கலையில், 'கொரோனா குறித்த உண்மைகளும், தடுப்பு முறைகளும்' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.அதில், துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பேசியதாவது:கடந்தாண்டில், கொரோனா என்ற வார்த்தை கூட, எவருக்கும் பரிச்சயமில்லை. ஆனால், இந்தாண்டில், அந்த நிலையே தலைகீழானது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட, உலகளாவிய பெருந்தொற்றாக, கொரோனா உருவெடுத்துள்ளது. சமகாலம் சந்தித்திராத பெரும் பாதிப்பான கொரோனா தொற்றுக்கு, உலக நாடுகள் எதுவுமே தப்பிக்கவில்லை.
இதற்கு முன், 'எபோலா, மார்பர்க்' போன்ற வைரஸ்கள் தான், அதிக தாக்கத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தின. அதுவும் கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே, அதன் பாதிப்பு இருந்தது.கொரோனாவிற்கு தடுப்பூசிகள், மருந்துகள் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும், நோய் வராமல் பாதுகாத்து கொள்வதே, அதற்கான சரியான மருந்தாக அமையும்.இவ்வாறு, சுதா சேஷய்யன் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார கல்வியாளர் மரியா அற்புதசாமி, பல்கலையின் பதிவாளர் அஸ்வத் நாராயணன், நோய் பரவியல் துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE