சென்னை:'குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுவதால், மாற்றுத்திறனாளிகளுக்கு என, 25 சதவீதம் கூடுதல் தொகை கோர முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 2,500 ரூபாய் வழங்குவதாக, தமிழக அரசு அறிவித்தது. இந்த தொகையில், 25 சதவீதம் கூடுதலாக, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கத்தின் பொதுச் செயலர் நம்புராஜன் தாக்கல் செய்த மனு: அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில், மற்றவர்களுக்கு வழங்குவதை விட கூடுதலாக, 25 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். 2019ல் பொங்கல் பரிசு வழங்கப் பட்ட போதும், 25 சதவீதம் கூடுதலாக வழங்க கோரியதை, அரசு பரிசீலிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் ஆஜராகி, ''மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் பின்பற்றப்படவில்லை. எந்த திட்டம் ஆனாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு, மற்றவர்களை விட கூடுதலாக, 25 சதவீதம் வழங்க வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''பொங்கல் பரிசு தொகை, குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல. அதனால், மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டப்பிரிவு, இதற்கு பொருந்தாது,'' என்றார்.இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 5க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE