சேலம்: இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு, முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற, இடைப்பாடி தொகுதி மக்களை, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இடைப்பாடி சட்டசபை தொகுதியின், பெரியசோரகை, பூமிரெட்டிப்பட்டியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள, முதல்வர் வீட்டை முற்றுகையிட, நேற்று முயன்றனர். முதல்வர் பிரசாரத்துக்கு சென்ற நிலையில், அங்கு பணியில் இருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். இதுகுறித்து, மக்கள், நிருபர்களிடம் கூறியதாவது: பூமிரெட்டிப்பட்டியில், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். எங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரியும், இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டும், கலெக்டர் முதல், சமீபத்தில் பிரசாரம் மேற்கொள்ள வந்த முதல்வர் வரை, கோரிக்கை மனு அளித்தோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், முதல்வர் வீடு அருகே தீக்குளிப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE